• Thu. May 28th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

அமெரிக்காவின் நாசா சக்திவாய்ந்த தொலைநோக்கி வழியாக 4 அண்டங்கள் தெரியுமாறு ஒரு படத்தை வெளியிட்டுள்ளது.

Byதரணி

Jul 17, 2024

நேற்று அமெரிக்காவின் நாசா புதிய பிரபஞ்ச படங்களை வெளியிட்டுள்ளது, இதுவரை ஒரே ஒரு அண்டத்தை அதாவது பால்வெளி எனும் ஒரே ஒரு அண்டத்தை மட்டும் வெளியிட்ட நாசா இப்பொழுது சக்திவாய்ந்த தொலைநோக்கி வழியாக 4 அண்டங்கள் தெரியுமாறு ஒரு படத்தை வெளியிட்டுள்ளது.

தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொலைவில் ஒரு தொலைநோக்கியினை நிறுத்தி 4 அண்டங்கள் தெரியுமாறு ஒரு படத்தை எடுத்துள்ளது மானிட விஞ்ஞானம்.

இது 1960களில் அவர்கள் சொன்ன விஞ்ஞான கருத்தை மாற்றுகின்றது, முதலில் பால்வெளி அல்லது ஆகாய கங்கை என்றொரு அண்டத்தை மட்டும் சொன்னவர்கள் இப்பொழுது கூடுதல் அண்டம் உண்டு என்கின்றார்கள்.

இதை என்றோ சொன்னமதம்.

1008 ஜீவ அண்டம் என என்றோ சொன்னவர்கள் இந்துக்கள், இன்னொரு பூமி என்றோ இன்னொரு கிரகம் என்றோ கூட சொல்லாமல் அன்றே 1008 ஜீவ அண்டம் என்றார்கள்.

ஜீவ அண்டம் என்றால் உயிர்கள் வாழ தகுதியான அண்டம், இது போக இன்னும் சூட்சுமமாக ஏகபட்ட அண்டம் உண்டு என சொன்னது இந்துமதம்.

கண்ணனின் விஸ்வரூப தரிசனம் என்பதும் சிவனின் விஸ்வேஸ்வர தரிசனம் என்பதும் இந்த பிரமாண்ட பிரபஞ்ச வடிவமே, காசி விஸ்வநாதன் என்பது விஸ்வ எனும் பெரும் வடிவத்தின் பெயரே.

நாசா வெளியிட்ட படங்களை காணும் பொழுது, பாசுரங்களின் வரி நினைவுக்கு வருகின்றது.

“பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ
பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்” எனும் வரி அது

அப்படியே சூரபத்மனும் இதர அசுரர்களும் அண்டம் தாண்டி சென்ற காட்சியும் நினைவுக்கு வருகின்றது.

இந்த அண்டங்களெல்லாம் நிரந்தரமாக இருப்பவை அல்ல, அவை நாசாவின் படத்தில் நிலையானதாக தோன்றலாமே தவிர எல்லாமே சுழன்று கொண்டிருப்பவை, எல்லாமே அசைபவை. அந்த அசைவுதான் நடராஜரின் நடனமாக இந்துக்களால் சொல்லபடுகின்றது.

அந்த வெளிச்சமும் இருளும் ஒரு கருநீல நிறத்தை பிரபஞ்சத்தில் ஏற்படுத்தும் அதைத்தான் “கண்ணன் மேனி கரு நீலம்” என்றார்கள், சிவன் விஷத்தை உண்டதால் மேனி நீலமாயிற்று என்றார்கள், அன்னையின் மேனி நீலம் என்றும் அவளை நீலவேணி என்றும் அழைத்தார்கள்.

படம் திருமூலரின் பாடல்களையும் நினைவுறுத்துகின்றது, இம்மாதிரியான பாடல்கள் நினைவுக்கு வருகின்றது.

“நின்றது அண்டமும் நீளும் புவியெலாம்
நின்றவிவ் வண்ட நிலைபெறக் கண்டிட
நின்றவிவ் வண்டமு மூல மலமொக்கும்
நின்றவிவ் வண்டம் பலமது விந்துவே.

காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
நாரணன் என்றும் நடுவுட லாய்நிற்கும்
பாரணல் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
ஆரண மாய்உல காயமர்ந் தானே “

இந்துக்கள் என்றோ சொன்ன பெரும் மண்டபத்தின் ஒரு படியில் கால் வைத்திருக்கின்றது விஞ்ஞானம், எல்லா படிகளையும் கடந்து அந்த பிரமாண்ட மண்டத்தை அளந்து முடித்திருக்கும் இந்துமதம் விஞ்ஞானத்தை நோக்கி சிரிக்கின்றது.

இன்னும் பல நூறு ஆண்டுகளில் விஞ்ஞானம் இன்னும் வளரலாம், வளர்ந்து இந்த பிரபஞ்சத்தை ஓரளவு அறியும்பொழுதே அது இந்துமதத்திடம் முழுக்க சரணடையும்

பிரபஞ்சத்தில் பால்போல் தெரியும் அந்த அண்டத்தை நோக்கும் பொழுது “திருபாற்கடலில் பள்ளி கொண்டாயே” எனும் வரி காதோரம் ஒலிக்கின்றது.

ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் மின்னும்பொழுது ஆதிஷேஷனுக்கு ஆயிரம் தலைகள் உண்டு அவற்றில் மாணிக்கமும் வைரமும் மின்னும் என இந்துக்கள் சொன்னதும் அது சரியாக இங்கு பொருந்துவதும் ஆச்சரியமானது.

இந்துக்களின் ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை, முழுமையானவை என்பதை எண்ணும்பொழுது ஆச்சரியம் மேலிடத்தான் செய்கின்றது.