அமெரிக்கா பொருளாதார மந்த நிலையை நோக்கி செல்வதாக அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் நுகர்வோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று, ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக உலகின் பல்வேறு முன்னணி நாடுகள் பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இந்த இரு பெரும் நிகழ்வுகளின் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியானது சர்வதேச நாடுகளை கடும் பொருளாதார நெருக்கடியில் தள்ளியுள்ளது. இந்த சூழலை காரணம் காட்டி உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் நுகர்வோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “அமெரிக்காவில் பண்டிகை விடுமுறை காலம் நெருங்கி வரும் நிலையில், மக்கள் புதிய கார்கள், டிவிக்கள், ஃபிரிட்ஜ் போன்ற பொருட்களை வாங்க வேண்டாம். அமெரிக்கா மந்த நிலையை நோக்கி செல்கிறது. எப்போது வேண்டுமானாலும் பிரச்னை தலை தூக்கலாம். எனவே, பணத்தை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் மிகப்பெரிய டிவி ஒன்றை வாங்க வேண்டும் என நினைத்தால், அதை ஒத்திப்போடுங்கள்.
நிலைமை எப்படி இருக்கிறது என்று கவனித்துப் பார்த்து பின்னர் முடிவெடுங்கள். வாகனம், ஃபிரிட்ஜ் மட்டுமல்ல, மற்ற எந்த பொருட்களாக இருந்தாலும் இதையே பின்பற்றுங்கள்” என்று எச்சரித்துள்ளார். அமேசான் நிறுவனத்தின் தலைவரே பொருட்களை யோசித்து வாங்குங்கள்; பணத்தை சேமித்து வையுங்கள் எனக் கூறியுள்ளது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.