உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதில் கிளை மேலாளர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி – கிளை மேலாளரைக் கண்டித்து அகில இந்திய பார்வட் ப்ளாக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் கிளை மேலாளராக பணியாற்றி வருபவர் முகமத் ராவுத்தர்., இவர் போக்குவரத்து பணிமனையில் பணியாற்றும் ஓட்டுநர்களுக்கு பணிகளை ஒதுக்கீடு செய்து வழங்குவதில் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக கூறியும், இந்த பிரச்சனை தொடர்பாக அகில இந்திய பார்வட் ப்ளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ- வுமான கதிரவனிடம் போனில் பேச கூட மறுத்தாக குற்றம் சாட்டி அகில இந்திய பார்வட் ப்ளாக் கட்சியினர், கிளை மேலாளரைக் கண்டித்து போக்குவரத்து பணிமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையிலான போலிசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடமும், கிளை மேலாளரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் மதுரை, தேனி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.