தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.27.50, இரண்டு மாதங்களில் 301 – 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல் இரண்டு மாதங்களில் 501-600 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.155 உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் 601 – 700 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.275 உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் கூடுதல் பொருளாதார சுமையை கொடுக்கும் இந்த மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது. செங்கல்பட்டில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள திமுக அரசை கண்டித்தும், அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை 10.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர் அதிமுகவினர்.
