அதிமுக வழக்கு கடந்த 3வது நாளாக நடைபெற்று வந்த நிலையில் ஜனவரி -10ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தபோது அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அதே கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் பி.வைரமுத்து ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்றது. இதில், தலைமை கழக நிர்வாகிகளுக்கு பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் இல்லை. கட்சியின் தலைவர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என எம்ஜிஆர் விதிகளை உருவாக்கியுள்ளார். அதை யாராலும் மாற்ற இயலாது. இரட்டை தலைமை காலாவதியாகவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொது குழுவை கூட்ட முடியும் என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தது. இந்நிலையில், இருதரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு தொடர்புடைய மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.