• Tue. Apr 30th, 2024

கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்த பாடுபடுவேன்-அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் உறுதி

ByG.Ranjan

Apr 16, 2024

நரிக்குடி ஒன்றியத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்த பாடுபடுவேன். இராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் உறுதி அளித்துள்ளார். நரிக்குடி பகுதியில் குடிநீர் தேவையை நிரந்தரமாக பூர்த்தி செய்ய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் தெரிவித்தார். இராமநாதபுரம் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜெயபெருமாள் போட்டியிடுகிறார். இராமநாதபுரம் தொகுதியில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகள் தோறும் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நரிக்குடி ஒன்றியத்தில் கருவக்குடி, கல்விமடை, புல்வாய்க்கரை நாலூர், முக்குளம், உலக்குடி, அழகாபுரி சாலை, இலுப்பகுளம், நரிக்குடி இருஞ்சிறை, எஸ்.வல்லக்குளம், வீரசோழன், மினாக்குளம், ஆணைக்குளம், பனையூர் உட்பட 25 க்கு மேற்பட்ட கிராமங்களில் இராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டி பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேய ஜெயபெருமாள்..,

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த எனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் அன்றாடம் சந்திக்கும் கிராம மக்களின் வாழ்க்கை நிலைமைகளை நன்கு தெரிந்தவன். மிகவும் பின் தங்கிய நரிக்குடி பகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து நிச்சயமாக நிறைவேற்றி தர பாடுபடுவேன். மக்களுக்கு குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க அனைத்து கிராமங்களிலும் கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். தொகுதியில் வளர்ச்சி அடையாத கிராம ஊராட்சிகள் மேம்பாட்டுக்காக மத்திய, மாநில அரசு திட்டங்களை கொண்டு வந்து ஊராட்சிகள் தன்னிறைவு அடைய பாடுபடுவேன். மேலும் பெண்கள் சுகாதார வளாகம், சமுதாய கூடங்கள், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தொகுதி அளவிலான கல்வி வழிகாட்டும் மையங்கள் மற்றும் வேலை வாயப்புக்காக இலவச, தொழிற் பயிற்சி மையங்கள் அமைக்க பாடுபடுவேன். திருச்சுழி தொகுதியில் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்ட கிருதுமால் போன்ற பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை முழுமையாக நிறை வேற்ற பாடுபடுவேன் . மேலும் மிகவும் பின் தங்கி கிடக்கும் நரிக்குடியை தனி தாலுகாவாக மாற்ற முயற்சி செய்வேன். மருது சகோதரர்கள் பிறந்த ஊரான நரிக்குடி பகுதியில் மருதுபாண்டியர்கள் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தொழிற்பயிற்சி கல்லூரி அமைக்க ஏற்பாடு செய்வேன். இராமநாதபுரம் தொகுதியில் அதிமுகவுக்கு மக்கள் அமோக ஆதரவு கொடுத்து வருகிறார்கள். நிச்சயமாக இராமநாதபுரத்தில் அதிமுக அமோக வெற்றி பெறும். தமிழகத்தில் மீண்டும் அதிமுக கூட்டணி வெ ற்றி பெறுவது உறுதியாகி விட்டது. வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார். பிரச்சாரத்தில் நரிக்குடி ஒன்றிய செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், பூமிநாதன் முன்னாள் எம் எல்.ஏக்கள் சிவசாமி , மணி மேகலை, கே.சி பிரபாத், சந்திரன், வழக்கறிஞர் சுப்பையா உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *