நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பெரியார் நகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக முகமூட்டுள்ள ஒற்றை யானை விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்களும் கேரட் பீன்ஸ் பீட்ரூட் வெள்ளைப் பூண்டு கிழங்கு முட்டைகோஸ் பூகோஸ் அவரை போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். பெரியார் நகர் கரிய மலை பகுதிகளில் கேரட் முட்டைகோஸ் பயிரிட்டு அறுவடை நிலையில் உள்ளன. நேற்று மாலை 3 மணிக்கு ஒற்றை காட்டு யானை விவசாய நிலங்களில் புகுந்து கேரட்டுகளை பிடுங்கி ருசி பார்த்தது. விவசாயிகளும் பொதுமக்களும் விவசாய நிலத்தில் யானை இருப்பதைக் கண்டு உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரமாக பொதுமக்கள் யானையை விரட்ட முயற்சியில் ஈடுபட்டு தகரங்களைக் தட்டியும் சப்தங்கள் எழுப்பியும் யானையை விரட்டினார்கள். சிறிது தூரம் சென்ற யானை தேயிலை தோட்டம் மற்றும் முட்புதர்களுக்கு இடையே சென்று மறைந்தது. கடந்த ஐந்து நாட்களாக மோல்குந்தா கெத்தை பெரியார் நகர் போன்ற பகுதிகளில் யானைகள் சுற்றி வருகின்றன தொடர்ந்து விவசாய நிலங்களை சூறையாடிவரும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி மீண்டும் வராதவாறு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.