சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றுள்ளது.
எட்டு நாடுகள் பங்கேற்கும் 9-வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் சத்ரான் 146 பந்துகளில் 177 ரன்கள் எடுத்தார். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் பேட்ஸ்மேன் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும். கேப்டன் ஹஷ்மதுல்லா 40, அஸ்மதுல்லா 41, நபி 40 ரன்கள் எடுத்தனர்.
326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து அணி விரட்டியது. சால்ட் 12, ஜேமி ஸ்மித் 9 ரன்கள் எடுத்து வெளியேறினர். ரூட் உடன் பென் டக்கெட் இணைந்து 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். டக்கெட் 38 ரன்களில் ரஷித் கான் சூழலில் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்தார்.
புரூக் 25, கேப்டன் பட்லர் 38, லிவிங்ஸ்டன் 10 ரன்கள் எடுத்தனர். 111 பந்துகளில் 120 ரன்கள் எடுத்து சதம் எடுத்திருந்தார் ஜோ ரூட். ஓவர்டன் 32, ஆர்ச்சர் 14 மற்றும் ரஷீத் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன் மூலம் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 317 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
ஆப்கானிஸ்தான் பவுலர் அஸ்மத்துல்லாஹ் உமர்சாய் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகளை அடுத்து இருந்து இங்கிலாந்து வெளியேறி உள்ளது. 8 ரன்களில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருதை இப்ராஹிம் ஜட்ரன் வென்றார்.