நீலகிரி மாவட்டம் உதகை படகு இல்லத்தில் சாகச விளையாட்டுகளை துவக்குவதற்காக பூமி பூஜையை தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் அடிகல்நாட்டி துவக்கி வைத்தார், இதில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நீலகிரிமாவட்டம் சுற்றுலாத்தலமாக இருப்பதால் வெளிநாட்டில் இருப்பது போல் சாகச நிகழ்ச்சிகளை துவக்கி வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அடிக்கல் நாட்டிய சுற்றுலாத் துறை அமைச்சர் மதி வேந்தன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும் போது, வெளி நாடுகளில் சாகச விளையாட்டுகள் பிரபலம் அடைந்துள்ளதால், நமது சுற்றுலா பயணிகளுக்கும் சாகச விளையாட்டுகளை அறிமுகபடுத்தும் வகையில் தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதன் முறையாக இதற்கு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக விதி முறைகள் அறிமுகப்படுத்தபட்டன. தனியார் பங்களிப்புடன் இழை வரிக் கோடு (ஜிப் லைன்) ரோலர் கோஸ்டர்,மங்கி ஜம்பிங் உள்ளிட்ட சாகச விளையாட்டுகள் இதில் அமைக்கப்படும் உதகை, கொல்லிமலை, ஜவ்வாது மலை, ஏலகிரி உள்ளிட்ட இடங்களில் ஈகே கேம்பிங் என்ற டென்ட்களில் தங்கி, இயற்கை காட்சிகளை காணும் வகையில் 3 கோடி செலவில் இவை அமைக்கப்பட உள்ளன. அதேப்போல் உதகை,கொடைக்கானல் போன்ற இடங்களிலும் மிதக்கும் உணவகம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிய முயற்சிகளை சுற்றுலா துறை மேற்கொள்ளவுள்ளது. தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களின் இணைப்பு சாலைகளை அமைக்க நகர்புற வளர்ச்சி துறை மற்றும் பிற துறைகளிடமிருந்து 50 கோடி நிதி உதவி பெற்று சாலைகள் சீரமைக்கபடும் என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் உள்ளிட்ட சுற்றுலாத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.