முன்னாள் பாஜக பிரமுகர் கேடி ராகவன் இடம்பெற்றது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக இருந்த கேடி ராகவன், வீடியோ காலில் ஒரு பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், தனது கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். மேலும், இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர், பாஜக பிரமுகர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனிக் குழுவும் நியமிக்கப்பட்டது. கே.டி. ராகவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் எம்.பி ஜோதிமணி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவிடம் புகார் மனு அளித்துள்ளார்.இதைத் தொடர்ந்து, மாநில தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலோடுதான் இந்த வீடியோ வெளியிட்டதாக பாஜக பிரமுகராக இருந்த மதன் ரவிச்சந்திரன் தெரிவித்தார். மேலும், கே.டி.ராகவனுக்கு எதிராக வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் பா.ஜ.கவிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை கஸ்தூரியும் கருத்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “‘கரும்பு தின்ன கூலி என்பது என்னவென்றால்- sting operation மூலம் வாங்கியாச்சு மானம் , அதுக்கு youtube விளம்பர வருமானம் ! #veralevel அடுத்தது யார்? அகப்பட்டவன் மட்டும் அயோக்கியன் போல புகார் குடுக்கும் புனிதர்களுக்கா?. இத்தனை நாளு ஒரு TV debate கூட முழுசா பாக்கல.. இன்னிக்கு சேர்த்து வச்சு எக்கச்சக்கமா பாத்துட்டோம்! தம்பதி சமேதரா ஒரு interview இப்போ வைரல்… அதுக்கு கமெண்ட்ஸ் தெரிச்சுக்கிட்டு இருக்கு. இந்த கன்றாவியில் சிக்கி பொதுவெளியில் விவாதிக்கப்படும் அப்பாவி பெண்களை நினைத்தால்…” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கமாக பெண்கள் விவகாரத்தில் பெண்களுக்கு ஆதரவான கருத்துகளை பதிவிடும் கஸ்தூரி, இந்த விவகாரத்தில் மறைமுகமாக வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரனைச் சாடியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.