• Tue. Apr 16th, 2024

ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராகும் நடிகர் சூர்யா..!

Byவிஷா

Jun 29, 2022

நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக அழைப்பு விடுத்திருப்பது தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த பெருமையாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது.
திரையுலகின் உட்சபட்ச விருதாகப் பார்க்கப்படுவது ஆஸ்கர் விருதுதான். இந்த விருதைப் பெறுவதற்கு பல தசாப்தங்களாக இந்தியத் திரைத்துறை முயன்று வருகிறது. ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது பரிந்துரைக்காக ஒருசில இந்தியப் படங்கள் பரிந்துரைக்கப்படும். அதில் கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற ‘சூரரைப்போற்று’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. பல்வேறு சுற்றுகளைக் கடந்து சென்ற அந்தப் படம், இறுதிப் பட்டியலுக்கு முன்பாக ஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து வெளியேறியது. இருப்பினும், இதுவே அந்தப் படத்துக்கும் அதில் பணியாற்றிய சூர்யா மற்றும் இயக்குநர் உள்ளிட்டோருக்கு கிடைத்த பெருமையாகவும் அங்கீகாரமாகவும் பார்க்கப்பட்டது.
அதேபோல் ஜெய்பீம் படத்துக்கும் உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஓடிடியில் ரிலீஸான இந்தப் படமும் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் போட்டியில் இடம்பெற்றது. இந்தப் படமும் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகவில்லை என்றாலும், விருது குழுவின் பாராட்டை பெற்றிருந்தது. தற்போது நடிகர் சூர்யாவுக்கு இன்னொரு பெருமை தேடி வந்துள்ளது. 95வது ஆஸ்கர் அகாடமி விருது விழாவுக்காக ஆஸ்கர் அமைப்பின் உறுப்பினராக, அந்த அமைப்பு சார்பில் சூர்யாவுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், இன்னொரு இந்திய நடிகையான கஜோலுக்கும் ஆஸ்கர் உறுப்பினராக அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சுமார் 397 பேருக்கு விடுக்கப்பட்டிருக்கும் அழைப்பில், இந்தியாவைச் சேர்ந்த திரைப் பிரபலங்களில் சூர்யா மற்றும் கஜோலின் பெயர்கள் இடம்பிடித்துள்ளன. இது தொடர்பான அழைப்புக் கடிதத்தை புகழ்பெற்ற மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அகாடமி சூர்யா மற்றும் கஜோலுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் கஜோலுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. தென்னிந்தியாவில் இருந்து ஆஸ்கர் பேனலுக்கு செல்லும் முதல் நடிகர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார். சூர்யாவின் கடின உழைப்பு மற்றும் தரமான படங்களை எடுக்க வேண்டும் என்பதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் ஆகியவற்றின் காரணமாக இப்படியான பெருமைகள் சூர்யாவைத் தேடி வந்துள்ளதாக அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 
சூர்யா தற்போது பாலாவின் படத்தில் முழுமூச்சாக நடித்து வருகிறார். முதல் ஷெட்யூல் ஷ_ட்டிங்கை முடித்த சூர்யா, அடுத்தக்கட்ட சூட்டிங்கில் விரைவில் பங்கேற்க இருக்கிறார். அதன்பிறகு இயக்குநர் சிவாவுடன் நடிக்க இருக்கிறாராம். இந்தப் படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *