இந்தியா- சீனா இடையே கடந்த 17 மாதங்களாக கிழக்கு லடாக்கில் எல்லைப் பிரச்னை நீடிக்கிறது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், சமீபத்தில்
13-ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. படைகளை விலக்கிக் கொள்வது, பழைய நிலையே எல்லையில் தொடரச் செய்வது குறித்து பேசப்பட்டது.
ஆனால் இந்தியாவின் கோரிக்கையை சீனா ஏற்காததால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதற்கிடையே, நீண்ட ஆண்டுகளாக அருணாச்சலபிரதேசத்தின் எல்லையை தொடர்ந்து சீனா சொந்தம் கொண்டாடிவருகிறது. தெற்கு திபெத்தின் ஒரு பகுதியை தனது என சீனா கூறி வருகிறது. மேலும், இந்தியத் தலைவர்கள் அங்கு செல்வதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கடந்த வாரம் அருணாச்சலப் பிரதேசத்திற்கு அரசுமுறைப் பயணமாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்றிருந்தார். இடாநகரில் உள்ள சட்டப்பேரவையிலும் அவர் உரையாற்றினார். இதற்கு சீனா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது.
சீனாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய வெளியுறவுத் துறை அந்நாட்டின் வெளியுறவுத் துறையின் கருத்தை நிராகரிப்பதாக கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியான தாவங் பகுதியில் இந்திய ராணுவம் பீரங்கிகளைக் குவித்துள்ளது. இதனால் இருதரப்பு எல்லைப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.