தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, அங்கு பெண்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. அரசியல், விளையாட்டு மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் மாணவிகளுக்கு கல்வி மறுக்கப்பட்டு வருகிறது அல்லது அவர்கள் தனியாக பிரிக்கப்படுகிறார்கள். பெண்கள் ஆசிரியப் பணி செய்யவும் அனுமதிக்கப்படவில்லை.
தற்போது ஆப்கானிஸ்தான் தேசிய ஜூனியர் மகளிர் வாலிபால் அணியை சேர்ந்த இளம் பெண் ஒருவரின் தலையை தலீபான்கள் துண்டித்ததாக வாலிபால் குழு பயிற்சியாளர் சுரயா அப்சலி, ‘பெர்ஷியன் இண்டிபெண்டன்ட்’ என்ற பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, தலீபான்களால் மஹ்ஜபின் ஹகிமி என்ற பெண் வீராங்கனை கொல்ல செய்துள்ளனர். ஆனால் இந்த கொடூரமான கொலை பற்றி யாரிடமும், பேச கூடாது என்று அவளுடைய குடும்பம் அச்சுறுத்தப்பட்டு உள்ளது. சில நாட்களுக்கு முன்பு, அவரது துண்டிக்கப்பட்ட தலை மற்றும் ரத்தம் தோய்ந்த படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது.
ஆகஸ்ட் மாதத்தில் தலீபான்கள் முழுமையான கட்டுப்பாட்டை எடுப்பதற்கு முன்பு அணியின் இரண்டு வீரர்கள் மட்டுமே நாட்டிலிருந்து தப்பிக்க முடிந்தது. தலீபான்கள் பெண் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு வேட்டையாடி வருகின்றனர். அதிலும், மகளிர் கைப்பந்து அணியின் உறுப்பினர்களை தேடுவதில் அவர்கள் அதிக ஈடுபாடு காட்டினார்கள். ஏன் என்றால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்று, கடந்த காலங்களில் அவர்கள் ஊடகங்களில் தோன்றினர். இதனால் கைப்பந்து விளையாட்டு வீரர்கள் அனைவரும் தப்பி ஓடி மறைந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம், பிபா மற்றும் கத்தார் அரசு ஆப்கானிஸ்தானின் தேசிய கால்பந்து அணி உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 100 வீராங்கனைகளை வெளியேற்றினர்.