நடிகை சாய்பல்லவி யூ-ட்டியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த துணிச்சலான பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சாய் பல்லவி. தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று பிரபலமான சாய்பல்லவி, மலையாளத்தில் வெளியான ‘ப்ரேமம்’ திரைப்படத்தின் மூலம் மலர் டீச்சர் என ரசிகர்களை கவர்ந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது வேணு உடுகுலா இயக்கத்தில் நடிகர் ராணா டகுபதியின் ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ள ‘விரத பர்வம்’ திரைப்படம் வருகிற ஜுன் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கான புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். படம் தொடர்பாக நடிகை சாய் பல்லவியும் பேட்டியளித்து வரும்நிலையில், யூ-ட்டியூப் ஒன்றிற்கு சாய் பல்லவி அளித்துள்ள பேட்டி தான் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
நீங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் இடதுசாரி இயக்கங்களால் ஈர்க்கப்பட்டவரா என கேட்கப்பட்ட கேள்விக்கு சாய்பல்லவி பதில் அளிக்கையில், நான் நடுநிலையான குடும்பச் சூழலில் வளர்ந்தேன். நல்ல மனிதராக இருக்க வேண்டு என்று கற்று கொடுக்கப்பட்டுள்ளது. இடதுசாரி, வலதுசாரி என இரண்டையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால் எது சரி, எது தவறு என்று நம்மால் ஒருபோதும் கூற முடியாது.‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தில் பண்டிட்டுகள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதை காட்டி இருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. பசுவை கொண்டு சென்ற ஒரு நபரை இஸ்லாமியர் என்று கருதி கும்பலாக தாக்குகிறார்கள். அந்த நபர் கொல்லப்பட்டவுடன் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடுகிறார்கள்.
காஷ்மீரில் அன்று நடந்ததற்கும் தற்போது நடந்து கொண்டிருப்பதற்கும் என்ன வித்தியாசம்?. நீங்கள் நல்லவராக இருக்காவிட்டால், இடதுசாரியாக இருந்தாலும, வலதுசாரியாக இருந்தாலும் நீதி கிடைக்காது. நான் நடுநிலையானவள். பெரிய எண்ணிக்கை கொண்ட மக்கள், சிறிய எண்ணிக்கை கொண்ட மக்களை தாக்கினால் அது தவறு. சரிசமமாக உள்ள இருவருக்கிடையேதான் போட்டி இருக்க வேண்டும், என கூறினார். சாய் பல்லவியின் இந்த கருத்து தற்போது வைரல் ஆகியுள்ளது. ஒரு சிலர் சாய் பல்லவிக்கு ஆதரவு தெரிவித்தாலும், ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.