திருவாரூரில் உள்ள ஒரு நகைக்கடையில், கவரிங் நகைகளைக் கொடுத்து 6 பவுன் தங்க நகைகளை பெண் ஒருவர் நூதன முறையில் அபேஸ் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழபாலம் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன். மேலராஜவீதியில் ஸ்வர்ண மயில் என்கிற பெயரில் பிரபல நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் 1 மணியளவில், 2 பெண்கள், குபேந்திரனின் கடைக்கு வந்தனர். அவர்கள், தங்களிடம் உள்ள 8 சவரன் நகைகளை கொடுத்து, புதிய நகை வாங்க வேண்டும் என குபேந்திரனிடம் கொடுத்துள்ளனர். அதை குபேந்திரன் பரிசோதனை செய்தபோது, ஒரிஜினல் தங்கம் என தெரிந்தது. இதையடுத்து அவர், உங்களுக்கு எத்தனை சவரனில் நகை வேண்டும். தேவையான டிசைன்களில் நகைகளை பார்த்து எடுத்து கொள்ளுங்கள் என கேட்டுள்ளார்.
அப்போது அந்த பெண்கள், கடையில் இருந்த ஊழியர்களிடம் அவர்களது கவனத்தை திசை திருப்பி சோதனை செய்வதற்கு கொடுத்த ஒரிஜினல் நகையை வாங்கினர். சிறிது நேரத்தில், நகைகளை கொடுத்து, 6 சவரன் நகைகைளை வாங்கி கொண்டு சென்றனர். அந்த பெண்கள், சென்ற பிறகு சந்தேகத்தின் அடிப்படையில் குபேந்திரன், மீண்டும் அவர்கள் கொடுத்த நகையை பரிசோதனை செய்தார். அப்போது அது போலி நகை என தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து குபேந்திரன், மன்னார்குடி நகர போலீசில் புகார் அளித்தார். போலீசார் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஊழியர்களிடம் இருந்து நகையை மீண்டும் வாங்கிய அவர்கள், அதே நகையைபோல் 916 முத்திரை பதித்த அதே டிசைனில் கவரிங் நகையை கொடுத்துவிட்டு புதிதாக 6 பவுன்நகையை வாங்கி நூதன முறையில் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, 2 பெண்களை வலைவீசி தேடிவருகின்றனர்.