கூட்டணியை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்; அதை, நான் பார்த்துக் கொள்கிறேன் என, திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு
திமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு முதல் முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என சுமார் 100 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா கொண்டாட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது . 2024-ம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இதில், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது; “கடந்த முறை 40 தொகுதிகளில் ஒரு தொகுதியை இழந்துவிட்டோம். இந்த முறை 40 தொகுதியிலும் வெல்ல வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து நாம் போட்டியிடுவோம். அணிகளுக்கென்று தன்னிச்சையாக அதிகாரம் வழங்கக்கூடிய வகையில் விதிகள் உருவாக்கப்படும். பூத் கமிட்டி அமைப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கூட்டணியை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். அரசின் திட்டங்கள் சரியாக சென்றடைகிறதா என்பதை மட்டும் நீங்கள் கவனியுங்கள்” எனக் கூறினார்.