வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தியதாக ஆ.ராசா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ. டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
1999-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தது முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் ஆ.ராசா தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி கூடுதலாக ரூ.27.92 கோடி அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.
2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் சுமார் 7 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.5.53 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதாக ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.