தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 284 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா பொதுமக்களிடமிருந்து பெற்று கொண்டார்.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி, புதிய வீட்டுமனைப் பட்டா வேண்டி, வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 284 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
முன்னதாக, சமூகநலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான 18 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களும். 20 பயனாளிகளுக்கு நவீன ரக தையல் இயந்திரங்களும் ஆக மொத்தம் 38 பயனாளிகளுக்கு ரூ.273,952 மதிப்பிலான தையல் இயந்திரங்களையும். மேலும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மனுச்செய்துள்ள 4 பயனாளிகளுக்கும் தையல் இயந்திரங்களை ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா ஜெயபாரதி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) .முகமதிஅலி ஜின்னா மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திருமதி இந்துமதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி சசிக்கலா. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி ராஜராஜேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.