திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பூதகுடி அரசு தொடக்கப்பள்ளியில் “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டம், 2023 – 24 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை, 2022 – 23ம் கல்வி ஆண்டு 5ம் வகுப்பு பயின்று நிறைவு செய்த மாணவர்களுக்கு நற் சான்றிதழ் வழங்கி பிரிவு உபச்சார விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்;கு ஊராட்சித் தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் எஸ்தர் ராஜம், கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியம் அனைவரையும் வரவேற்றார்.
இதில் 2022 – 23ம் ஆண்டில் பூதகுடி பள்ளியில் நடைமுறைக்கு வந்த ரூ. 28 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சித் திட்ட பணிகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. இதன் மூலம் பள்ளியின் கட்டமைப்பு நவீனப்படுத்தப்பட்டு மாணவர்கள் பயிலுவதற்கு தற்கால சூழலுக்கு உகந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இப் பகுதியைச் சேர்ந்த பெற்றோர்களிடம் அரசுப் பள்ளியில் சேர்ப்பதன் மூலம் நடைமுறையில் உள்ள நலத்திட்டங்கள் குறித்தும், பொருளாதார விரையம் தவிர்க்கப்படுகிறது என்று விளக்கி கூறப்பட்டது. மாணவ – மாணவியருக்கு பரிசுகள் வழங்கினர். இதில் வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுளாதேவி, தலைமையாசிரியர்கள் கோ. அய்யாபட்டி வின்சென்ட் பால்ராஜ், வடகாட்டுப்பட்டி ஜான் பீட்டர், மற்றும் ஆசிரியர்கள் உள்பட பள்ளியில் பயிலும் மாணவர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலக பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.