• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்: 7 மாநில கட்சித் தலைவர்கள்பங்கேற்பு

ByP.Kavitha Kumar

Mar 22, 2025

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக 7 மாநில கட்சிகளின் தலைவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு தொகுதி மறுவரையறை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில வாரியாக மக்கள்தொகை அடிப்படையில் இந்த பணிகள் நடைபெறும் என்பதால், தமிழ்நாடு போன்ற மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்திய மாநிலங்களில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பம் முதலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனையடுத்து, கடந்த 5-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. 58 கட்சிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைத்து கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுவரையறையால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி, மாநில முதலமைச்சர்கள் மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்) ரேவந்த் ரெட்டி (தெலங்கானா),பினராயி விஜயன் (கேரளா), சித்தராமையா (கர்நாடகா), பகவந்த் மான் (பஞ்சாப்), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா) மற்றும் கர்நாடகா துணை முதலமைச்சர் சிவகுமார், முன்னாள் முதலமைச்சர்கள் ஜெகன் மோகன் ரெட்டி (ஆந்திரா), நவீன் பட்நாயக் (ஒடிசா), சந்திரசேகர ராவ் (தெலங்கானா) ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க, நடவடிக்கைகள் மேற்கொள்ள கூட்டு நடவடிக்கைக்குழு அமைப்பது பற்றி ஆலோசனை நடத்துவதற்கான கூட்டம் மார்ச் 22-ம் (இன்று) தேதி சென்னையில் நடைபெறும் என்றும், அதில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.

சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்பட 7 மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் 24 பேர் கலந்துகொள்கின்றனர்.