கூடலூர் அருகேயுள்ள மழவன் சேரம்பாடி பகுதியில், 4 வயது மதிக்கத்தக்க குட்டி யானை ஒன்று, கடந்த 2 ஆம் தேதி சேற்றில் சிக்கி உயிரிழந்தது. இதனால், அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லாமல் நின்றிருந்த தாய் யானை உட்பட மூன்று யானைகளும் நேற்று காலை வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்தது.
இதனை அடுத்து, வனத்துறையினர் குட்டி யானையின் உடலைக் கைப்பற்றி கூராய்வு செய்தனர். அங்கேயே அதனைப் புதைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு வழியின்றி கூராய்வு செய்யப்பட்ட குட்டி யானையின் உடலை 10க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டிய வனத்துறையினர், கொட்டும் மழையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்று புதைத்தனர்.