இன்று திருமண முகூர்த்தம் என்பதால் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் திருமண ஜோடிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக திருப்பரங்குன்றம், திருத்தணி முருகன் கோயில்களில் புதுமணி ஜோடிகள் கூட்டத்தால் திணறிப்போனது.
அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோவிலில், முருகப்பெருமான் மணக்கோலத்தில் காட்சி அளிப்பதால் வெளியூர்களில் இருந்து வரும் புதுமண ஜோடிகள் திருத்தணி பகுதியில் அதிக அளவில் திருமணம் செய்து முருகப்பெருமானை தரிசித்துச் செல்கிறார்கள். இதனால் முகூர்த்த தினங்கள் கோவிலில் கூட்டம் அலைமோதும்.இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால், திருத்தணி கோவிலில் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதேபோல், கோவிலைச் சுற்றி உள்ள சுமார் 70 மண்டபங்களிலும் திருமணம் நடைபெற்றது.
இதனால், நேற்று இரவு முதலே திருமண கோஷ்டியினர் திருத்தணியில் பஸ், கார்களில் வந்து குவிந்தனர். இதன் காரணமாக திருத்தணி நகரில் அனைத்து இடங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.