• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

சோனியாகாந்தியிடம் 11 மணி நேரம் விசாரணை!!

ByA.Tamilselvan

Jul 27, 2022

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியாகாந்தியிடம் 3ஆவது நாளாக நடந்த விசாரணை நிறைவு பெற்றதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிட்டு வந்த ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களை இயக்குனர்களாக கொண்ட ‘யங் இந்தியா’ நிறுவனம் கையகப்படுத்தியது.
இதன்மூலம் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை ‘யங் இந்தியா’ அபகரித்துள்ளதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாகக் கூறி, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இது தொடர்பாக ராகுல் காந்தியிடம் 5 நாட்கள் சுமார் 50 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து விசாரணைக்காக சோனியா காந்திக்கு 2 முறை சம்மன் அனுப்பியும், கொரோனா பாதிப்பால் அமலாக்கத்துறை முன்பாக அவரால் ஆஜராக முடியவில்லை.
தொற்றில் இருந்து மீண்ட நிலையில், கடந்த 21ஆம் தேதி அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் சோனியா காந்தி முதல் முறையாக ஆஜரானார். இந்தநிலையில், நேற்றும், இன்றும் சோனியா காந்தி ஆஜராகி கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இந்நிலையில் 3ஆவது நாளாக நடந்த விசாரணை நிறைவு பெற்றதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 3 நாட்களிலும் சுமார் 11 மணி நேரம் சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரித்துள்ளது.