• Sat. May 4th, 2024

சாதி ரீதியான கேள்வி – விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு

ByA.Tamilselvan

Jul 15, 2022

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளில் சாதிரீதியாக
கேள்வி ஒன்று இடம் பெற்றிருந்தது.இதுகுறித்து விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


ஒரு கேள்வியில் 4 ஆப்ஷன்களாக சாதிப் பெயர்கள் கொடுக்கப்பட்டு அதில் எந்த சாதி தாழ்த்தப்பட்ட சாதி என இடம் பெற்றிருந்தது. இது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தரப்பினர் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.இதுகுறித்து பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனிடம் கேட்டபோது, “நேற்று நடைபெற்ற இந்த தேர்வில் கேட்கப்பட்ட இந்த சர்ச்சைக்குரிய வினாவானது பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அப்பாற்பட்ட பேராசிரியர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட வினாத்தாள் என்பதால் மாணவர்கள் கைகளுக்கு வினாத்தாள் சென்ற பிறகுதான் இது தொடர்பான விவரங்கள் எங்களுக்கே தெரிய வந்தது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி வினாத்தாள் குழுவின் தலைவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.


இந்நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பருவத் தேர்வில் சாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டது குறித்து விசாரிக்க, உயர்கல்வித்துறை உயர் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை துறை மூலமாக எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *