கொரோனா பெருந்தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தான வரலாற்றில் இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் ரூ.6.8 கோடி காணிக்கையை பக்தர்கள் உண்டியலில் செலுத்தியுள்ளனர். இதற்கு முன்னர் 2012 ஏப்ரல் 1ம் தேதி பக்தர்கள் செலுத்திய ரூ.5.73 கோடியே அதிகபட்ச காணிக்கையாக இருந்தது.
திருமலை ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் பல்வேறு சிறப்பு உற்சவங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, வருகிற 10ஆம் தேதி முதல் ஏகாதசி சாதுர்மாஸ்ய விரதம் தொடங்குகிறது. இதையொட்டி ஜூலை 13ம் தேதி குரு பவுர்ணமி கருட சேவை, 17ஆம் தேதி ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளது. 23ஆம் தேதி ஆண்டாள் திருவாடிப்பூரம் உற்சவம், 24ஆம் தேதி சர்வ ஏகாதசியும், 29ஆம் தேதி ஸ்ரீசக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, ஸ்ரீபிரதிவாதி பயங்கர அன்னாவின் வருட திருநட்சத்திர உற்சவம் நடைபெற உள்ளது என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.