வேதாரண்யம் அருகே கோடியக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆறுகாட்டுத்துறைச் சேர்ந்த சங்கர் மற்றும் சிவக்குமாரின் படகுகளில் தலா 4 பேர் மீன்பிடித்து கொண்டிருந்தனர். இந்நிலையில், கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 கிலோமீட்டர் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, இரண்டு படகுகளில் வந்த ஆறு இலங்கை மீனவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். சங்கர் படகிலிருந்து வலைகளையும், சிவக்குமாருடைய படகிலிருந்து வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, டீசல் உள்ளிட்ட பொருட்களையும் கொள்ளையடித்ததோடு, அவர்களையும் மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர்.
ரூ. 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி பொருட்களை இழந்து, நேற்று கரை திரும்பிய மீனவர்கள் இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.இதையடுத்து கொடிய ஆயுதத்தை பயன்படுத்தி கொள்ளையடித்ததாக இலங்கையைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 397 பிரிவின் கீழ் வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.