• Thu. May 2nd, 2024

முல்லைப் பெரியாறு அணை நாளை ஆய்வு

மத்திய நீர்வள ஆணைய செயற் பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான துணைக் கண்காணிப்பு குழுவினர் நாளை (பிப்.25) முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்கின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதி மன்றம் மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல்சன் ராஜ் தலைமையிலான மூவர் கண்காணிப்பு குழுவை அமைத்தனர். இக்குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக தற்போது கொச்சியிலுள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக முல்லைப் பெரியாறு சிறப்பு கோட்ட செயற் பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற் பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கட்டப்பனை நீர்ப்பாசன செயற் பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர். கடந்த ஆக.,17ல், அணையின் நீர்மட்டம் 138 அடியாக இருந்தபோது, துணைக் குழுவினர் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் 129.50 அடியாக குறைந்துள்ள நிலையில், துணைக் கண்காணிப்பு குழுவினர் முல்லைப் பெரியாறு அணையில் நாளை (பிப்.25) ஆய்வு செய்கின்றனர். இதைத்தொடர்ந்து, துணைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் கண்காணிப்பு குழுவினருக்கு அனுப்பி வைக்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *