• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

தியேட்டர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து இன்று முக்கிய அறிவிப்பு?

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவடையும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த 1ஆம் தேதி முதல் அதிகரித்து வந்தது. ஆயிரக்கணக்கில் எகிறிய கொரோனா ஒரு நாள் பாதிப்பு 30 ஆயிரம் வரை சென்றது. இதையடுத்து தமிழகத்தில் கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டன. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு லாக்டவுன் என அறிவிக்கப்பட்டது. அது போல் சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்புகள் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக குறைந்து வரும் நிலையில் அந்த உத்தரவுகள் திரும்ப பெறப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகள் திறப்பு தவிர மற்ற கட்டுப்பாடுகள் அப்படியே உள்ளன. இந்த கட்டுப்பாடுகள் வரும் 15 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில் நர்சரி பள்ளிகளை திறக்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. மேலும் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது. மேலும் திருமணம், இறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஆட்கள் கலந்து கொள்ளும் கட்டுப்பாடுகளிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு விதிக்கப்பட்ட தடையும் சில கட்டுப்பாடுகளும் வாபஸ் பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நிலையில் கொரோனா தொற்று அதிகம் ஏற்படாமல் இருக்க விதிமுறைகள் வகுக்கப்படலாம் என கூறப்படுகிறது.