மானாமதுரை நகராட்சியாக மற்றப்பட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 30 வாக்குச்சாவடிகள் அமைக்க கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது
தரம் உயர்த்தப்பட்ட மானாமதுரை நகராட்சியில் உள்ளாட்சித் தேர்தலுக்கு 30 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது . இதையடுத்து நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மானாமதுரை நகராட்சியில் 27 வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன . பேரூராட்சியாக இருந்தபோது 18 வார்டுகள் இருந்தது .
மானாமதுரை நகராட்சியில் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியிடுவது சம்பந்தமாக அனைத்து அரசியல் கட்சியினர் பங்கேற்ற கருத்து கேட்புக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மானாமதுரை நகராட்சியைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அரசியல் கட்சியினர் வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியல் வெளியிடுவது குறித்து நகராட்சி ஆணையரிடம் விளக்கம் கேட்டு பேசினர் , அப்போது ஆணையர் கண்ணன் பதிலளித்து பேசுகையில் , மானாமதுரை நகராட்சியில் உருவாக்கப்பட்டுள்ள 27 வார்டுகளுக்கு 27 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் . 1200 வாக்குகளுக்கு மேல் உள்ள மூன்று வார்டுகளுக்கு பெண்களுக்கு என கூடுதலாக மூன்று வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் . ஆக மொத்தம் 30 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் . எந்தெந்த வார்டுகளில் யார் யார் போட்டியிடலாம் என்பது குறித்த ஒதுக்கீடு விபரம் விரைவில் வெளியிடப்படும் என்றார்.