கோவை அரசுத் தலைமை மருத்துவமனையில் மூட்டைப் பூச்சிகளின் தொந்தரவு மற்றும் போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

கோவை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய பொதுமக்கள் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள பல்வேறு வார்டுகளில் மூட்டைப் பூச்சிகளின் தொல்லை மிகக் கடுமையாக இருப்பதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள கட்டில்கள், மெத்தைகள் மற்றும் மரப் பெஞ்சுகளில் மூட்டைப் பூச்சிகள் அதிக அளவில் நிறைந்து காணப்படுவதால், இரவில் தூங்க முடியாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.
சிகிச்சைக்கு வந்து உள்ள நிலையில், இந்த மூட்டைப் பூச்சி கடியால் மேலும் அலர்ஜி மற்றும் தோல் உபாதைகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டு உள்ளதாக நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மற்றொருபுறம், மருத்துவமனையில் போதிய தூய்மைப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் வார்டுகளை அவ்வப் போது கிருமிநாசினி தெளித்துத் தூய்மைப்படுத்துவதிலும், நோயாளிகளைப் பராமரிப்பதிலும் தொய்வு ஏற்பட்டு உள்ளது.
எனவே, கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, அனைத்து வார்டுகளிலும் மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க மருந்து தெளிக்கவும், கூடுதல் பணியாளர்களை நியமித்துச் சுகாதாரத்தைப் பராமரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.





