சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் கோ-ஆப் டெக்ஸ் காலனியில், குளிர்சாதனப் பெட்டி திடீரென தீப்பற்றி வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ், ஸ்ரீதர் உள்ளிட்ட 8 இளைஞர்கள் அப்பகுதியில் வாடகை அறை எடுத்து தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று இரவு பணியை முடித்துவிட்டு சந்தோஷ் மற்றும் ஸ்ரீதர் ஆகிய இருவரும் இன்று அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அறை முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக வெளியே வந்து பார்த்தபோது, குளிர்சாதனப் பெட்டி தீப்பற்றி கரும்புகையுடன் எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தீயை அணைக்கும் நோக்கில் அவர்கள் தண்ணீர் ஊற்ற முயன்றபோது, குளிர்சாதனப் பெட்டி திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் மேலும் ஆபத்து ஏற்படும் முன்பே இருவரும் அறையை விட்டு பாதுகாப்பாக வெளியேறினர்.
பின்னர் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை விரைவாக கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அறையில் இரண்டு பேர் மட்டுமே இருந்ததால், பெரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் குளிர்சாதனப் பெட்டி மற்றும் அறையில் இருந்த சில பொருட்கள் தீயில் சேதமடைந்தன.
மின்கசிவு அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குளிர்சாதனப் பெட்டி வெடித்து சிதறிய இந்த சம்பவம், முடிச்சூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




