• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தாம்பரம் சண்முகம் சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதல்..,

ByPrabhu Sekar

Sep 4, 2026

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சண்முகம் சாலையில் பொதுமக்கள் பெருமளவில் திரண்டதால், அப்பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று பக்தி பரவசத்துடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தாம்பரம் சண்முகம் சாலையில் அமைந்துள்ள கடை வீதிகளில் சிறுவர்களை கிருஷ்ணர் மற்றும் ராதை வேடங்களில் அலங்கரிக்க தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வத்துடன் குவிந்தனர்.

பட்டு ஆடைகள், மயில் இறகு கிரீடங்கள், புல்லாங்குழல், முத்து மாலைகள், கிருஷ்ணர் சிலைகள், பூஜை பொருட்கள் உள்ளிட்டவை கடைகளில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக, தங்கள் குழந்தைகளை பாலகிருஷ்ணர் வேடத்தில் அலங்கரிக்க பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டியதால், கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும், கிருஷ்ண ஜெயந்திக்காக வீடுகளில் பூஜை நடத்த தேவையான வெண்ணெய் பாத்திரங்கள், அலங்கார பொருட்கள், கோலப் பொருட்கள் மற்றும் மலர் அலங்காரங்களும் அதிகளவில் விற்பனையாகின. விற்பனையாளர்கள் கூறுகையில், கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சண்முகம் சாலை முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்ததுடன், குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து பொருட்களை வாங்கிச் சென்ற காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்தது.

பக்தி, பாரம்பரியம் மற்றும் குடும்ப மகிழ்ச்சி ஒன்றிணைந்த கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம், தாம்பரம் பகுதியில் உற்சாகமான திருவிழா சூழலை உருவாக்கியுள்ளது.