விருதுநகர் மாவட்டம் சிவகாசி சேனைபுரம் காலனியை சேர்ந்த செல்வி என்ற பெண்மணி தனது சகோதரியின் 9 வயது மற்றும் 5 வயதுடடைய இரு பெண் குழந்தைகளுடன் கார்னேஷன் காலனியில் உள்ள மாநகராட்சி சிறுவர் பூங்காவில் பொழுதுபோக்குவதற்காக வந்துள்ளனர்.

அப்போது அவரது அருகில் விளையாடிக்கொண்டிருந்த நட்சத்திரா என்ற 5 வயது பெண் குழந்தையை மது போதையில் இருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் தூக்கிச் சென்று கடத்த முயன்றுள்ளார். அப்போது செல்வி கூச்சலிட்டதால் அருகில் இருந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து கேட்டறிந்து குழந்தையை கடத்திச் சென்ற வட மாநில இளைஞரை சுற்றி வளைத்து பிடித்து குழந்தையை மீட்டதுடன் அவருக்கு தர்ம அடி கொடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை கடத்த முயன்றது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மக்சித்துல் என்பதும், அவர் திருத்தங்கல் சாலையில் உள்ள பேக்கரியில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. குழந்தையை கடத்த முயன்ற அசாம் மாநில இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவர் பூங்காவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் சிறுமியை வட மாநில இளைஞர் கடத்த முயன்ற சம்பவம் சிவகாசிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



