காரைக்காலில் கட்டப்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை புதுச்சேரி அரசின் அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மத்திய அரசின் 12 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக காரைக்காலில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தை அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன், காரைக்கால் மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் இணைந்து பார்வையிட்டார்.
முதலில் செயல்பாட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை பார்வையிட்ட அமைச்சர், கல்லூரி இயக்குநர், முதல்வர் மற்றும் பேராசிரியர்களை சந்தித்து கலந்துரையாடினார். தொடர்ந்து, கல்லூரி வளாகத்திற்கு அருகில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனை கட்டிடப் பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் அமைச்சருக்கு விரிவாக விளக்கமளித்தனர்.

இந்த ஆய்வில் பாஜக காரைக்கால் மாவட்டத் தலைவர் முருகதாஸ், மாநிலச் செயலாளர் துரை சேனாதிபதி, திருநள்ளாறு தொகுதி தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 12 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தை ஆய்வு செய்தோம். மருத்துவக் கல்லூரி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனுடன் இணைந்த மருத்துவமனை சுமார் ரூ.480 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது 60 சதவீதத்திற்கும் அதிகமான பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. வரும் ஏப்ரல் மாதத்திற்குள் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையும் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது” என்றார்.




