காரைக்கால் அடுத்த தலத்தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீசிவலோகநாத சுவாமி தேவஸ்தானத்தில் ஆண்டு தோறும் விதைத்தெளி உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
முன்னொரு காலத்தில் இவ்வூரில் மழை இல்லாது உணவு பயிர்கள் விளைச்சலின்றி பஞ்சம் ஏற்பட்ட நிலையில் ஊர் மக்கள் திரண்டு வந்து இவ்வாலயத்தின் இறைவனிடம் முறையிட்டனர்.மக்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு சிவனே ஏர்கலப்பை ஏந்தி இவ்வூர் வந்து விதைத் தெளித்து விவசாயம் செய்ததாக ஐதீகம்.அதனை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் விதைத்தெளி உற்சவம் அன்று ஊர் மக்கள் திரண்டு இவ்விழாவை கொண்டாடி வருவது வழக்கம்.இந்த ஆண்டு விதைத்தெளி உற்சவம் நேற்று ஏகாதச ருத்ர ஹோமமும்,மாலை சுவாமி-அம்பாள் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.
இன்று காலை உற்சவர் ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீசிவலோகநாத சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி விஸ்வரூப தரிசனமும், அதனை தொடர்ந்து மூலவரிடம் விதை நெல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது.இதனை தொடர்ந்து விதை நெல்லை எடுத்து வந்து ஆலய நந்தவனம் முன்பு உள்ள நாகராஜ கணபதி சன்னிதியில் வைத்து பூஜித்த பின் விதை நெல்லுடன் ஆலய பிரகாரத்தை வலம் வந்து ஆலய நந்தவனத்தில் விதைத்தெளி உற்சவம் நடைபெற்றது.தொடர்ந்து சுவாமி,அம்பாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
உணவு பஞ்சமின்றி ஊர் சுபிட்சம் பெறவும்,விவசாயம் பெருகவும் வேண்டி ஆண்டு தோறும் விதைத்தெளி உற்சவம் நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆலய நந்தவனத்தில் விதை தெளித்து சுவாமி தரிசனம் செய்தனர்.