காரைக்கால் பி.கே. சாலையில் அமைந்துள்ள தனது வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டவர்கள், ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் வீட்டை காலி செய்யாமல் அபகரிக்கும் நோக்கில் செயல்படுவதாகக் கூறி வீட்டின் உரிமையாளர் இளையராஜா, காரைக்கால் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அவரது புகாரில், தரைத்தளம் மற்றும் முதல் தளத்தைக் கொண்ட தனது வீட்டை ரம்ஜான்பீவி என்பவருக்கு 11 மாத ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டதாக தெரிவித்துள்ளார். ஒப்பந்த காலம் முடிந்த பின்னர், வேறு வீடு பார்த்துவிட்டு விரைவில் காலி செய்து விடுவதாக ரம்ஜான்பீவி கூறியிருந்தாலும், தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

பின்னர் அந்த வீட்டையே வாங்கிக் கொள்வதாக கூறி மேலும் சில காலம் இழுத்தடித்ததாகவும், தற்போது வாடகைத் தொகையையும் மின்கட்டணத்தையும் செலுத்தாமல் வீட்டை காலி செய்ய மறுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அபுதாகிர் என்பவர் மூன்று மாதங்களுக்குள் வீட்டை காலி செய்து ஒப்படைப்பதாக எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் அளித்திருந்ததாகவும், அந்த காலக்கெடு முடிந்த பின்னரும் இதுவரை வீட்டை காலி செய்யவில்லை என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
அபுதாகிர் மற்றும் ரம்ஜான்பீவி ஆகியோர் இணைந்து வீட்டை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ள இளையராஜா, இந்த விவகாரத்தில் காவல்துறை துரிதமாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது சொத்துரிமையை பாதுகாக்க காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீண்ட காலமாக நிலவி வரும் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.




