சென்னை நீலாங்கரையிலுள்ளஆர்.கே. கன் வென்ஷன் ஹாலில் அடுத்த( ஜூலை) மாதம் 11 மற்றும் 12-ம் தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு நாட்கள் பட்டாசுக் கண்காட்சி மற்றும் மாநில மாநாடு தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெறுகிறது.

சிவகாசி பட்டாசுத் தொழிலின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதமாகவும், சிவகாசி பட்டாசுத் தொழிலை சர்வதேச அளவில் முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாகவும் சென்னையில் இந்திய பட்டாசு எக்ஸ்போ எக்ஸ்போ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்திய, மாநில அமைச்சர்களுடன், பாதுகாப்பு நிபுணர்களும், அப்ப பல்வேறு அரசு துறைகளைச் சார்ந்தவர்களும் பங்கேற்கின்றனர். இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டு பட்டாசுக் கண்காட்சியில் தமிழகம் மற்றும் அகில இந்திய அளவிலிருந்து 3- ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனையாளர்கள் கலந்து கொள்ள, பட்டாசு உற்பத்தி மற்றும் தொழில் சார்ந்த பாதுகாப்பு விதிமுறைகள், அறிவுரைகள் விளக்கமளித்து எடுத்துரைக்கப்படுகின்றன.
மத்திய, மாநில அரசாங்கங்களின் ஆதரவோடு சிவகாசி பட்டாசுகள் உலகளவில் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் உருவாகி வரும் இந்த சூழ்நிலையில் சிவகாசி பட்டாசுத்தொழில் வணிகத்தையும் உலகச் சந்தையில் சர்வதேச அளவில் முன்னெடுத்துச் செல்லும் ஒரு வாய்ப்பாக பட்டாசு வணிகர்களின் மாநில மாநாடு நடைபெறுகிறது.

ஜூலை 12 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் மக்கள் அதிகமாகக் கூடுமிடமான மெரினா கடற்கரை அல்லது பெசன்ட் நகர் பீச்சில் கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சிகளுக்கு அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குட்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக பட்டாசை விரும்பாதவர்கள் என அனைத்து தரப்பினர்களும் பட்டாசை விரும்பும் வாய்ப்பாக அமையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று ஜூலை 11 அல்லது 12-ம் தேதி களில் ஏதாவது ஒரு நாளை பட்டாசு தொழிலாளர்கள் தினமாகக் கொண்டாட தமிழக அரசு முடிவெடுத்து அறிவித்தால் இனி வரும் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு தொழிலாளர்கள் தினத்தைக் கொண்டாடி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படு மென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு தொழிற்சாலை மற்றும் பட்டாசு விற்பனை நிலையங்களுக்கு உரிமம் பெற தனித்தனித் துறையினரை நாடாமல் ஒற்றை சாளர முறையில் உடனுக்குடன் உரிமம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் பட்டாசு விற்பனையாளர்கள் முன் வைத்துள்ளனர்.




