சிவகாசியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு 124 பால்குடம் ஊர்வலத்தில் பெருஞ்சலங்கையாட்டம், சிலம்பாட்டம்… ராட்சத மாலை அணிவித்து காமராஜருக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் கல்வி திருவிழா நடைபெற்றது. விழாவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பழைய விருதுநகர் ரோட்டில் காமராஜர் வாசக சாலையிலிருந்து ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பின்னர் காமராஜர் சிலைக்கு பாலபிஷேகம் செய்தனர்.
ஊர்வலத்தின் போது கேரளா செண்டை மேளம் முழங்க சிலம்பாட்டம் ஆடியபடியும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கால்களில் சலங்கை கட்டி பாரம்பரியமிக்க பெருஞ்சலங்கை நடனமாடியது காண்போரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. தொடர்ந்து தீ சாகசமும் நடைபெற்றது.
நாடார் மகாஜன சங்க மண்டல தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். இளைஞர் அணி செயலாளர் ஜோதி முருகன் முன்னிலை வகித்தார். மண்டல தலைவர் மகா கிப்சன், மண்டல செயலாளர் கனகரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதற்கான ஏற்பாடுகளை நாடார் மகாஜன சங்க இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் அறிவு ஒளிஆண்டவர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.




