வெம்பக்கோட்டை ஒன்றியம் துலுக்கன்குறிச்சி சிவகாசியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. தென்காசி மாவட்டம் மானூர் பகுதியில் இருந்து துலுக்கன்குறிச்சி ,வெம்பக்கோட்டை வழியாக சிவகாசி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் துலுக்கன்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீர் வெளியேறி செல்கின்றது .இதனால் அப்பகுதியில் தெப்பம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. கோடை வெயில் காரணமாக பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.இந் நிலையில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் சரி செய்யாததால் சிவகாசி, வெம்பக்கோட்டை, பகுதியில் தாமிரபரணி குடிநீர் சப்ளை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் வண்டியில் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது. மேலும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் சரி செய்ய நடவடிக்கை எடுக்காததால் தினமும் தண்ணீர் யாருக்கும் பயன்படாமல் வீணாகி வருகிறது.

ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குழாயை சரி செய்து குடிநீர் வீணாக செல்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



