கோவை, காந்திபுரத்தில் இருந்து நரசீபுரத்தை நோக்கி 21 ஏ அரசு பேருந்து சென்றது. நீட் தேர்வு எழுதுவதற்காக கடலூரில் இருந்து மாணவி ஒருவருடன் குடும்பத்தினர் காரில் வந்தனர். விராலியூர் அருகே பேருந்தும், காரும் எதிரெதிரே வந்த போது பேருந்து மோதி காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து விட்டது.

இதனால் கார் ஓட்டுநர் இறங்கி வந்து பேருந்து ஓட்டுனர், நடத்துனருடன் வாக்குவாதம் செய்தார். இந்த தகராறு முற்றி கைகலப்பானது. ஒருவரை, ஒருவரை தாக்கிக் கொண்டனர். இதனால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது. தங்களை தாக்கியதாகவும், இதனால் காயம் அடைந்ததாகவும், கூறி ஓட்டுனர் ரவிக்குமார் மற்றும் நடத்துனர் பத்மநாபன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் தொண்டாமுத்தூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பேருந்து ஓட்டுனர், நடத்துனர் தாக்கப்பட்டதை கண்டித்து அந்த வழியாக சென்ற மற்ற அரசு பேருந்து ஓட்டுநர்கள், பேருந்து நிறுத்தினார்கள்.

இதனால் இரவில் பேருந்துக்காக காத்து நின்ற பயணிகள் பேருந்து கிடைக்காமல் அவதிக்கு உள்ளானவர்கள். பின்னர் தனியார் வாகனங்களில் தங்கள் வீடுகளுக்கு போய் சேர்ந்தனர். பேருந்து ஓட்டுநர்களின் போராட்டம், கார் ஓட்டுநர் தகராறு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.




