மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின்தடை காரணமாக உள் மற்றும் வெளி நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இங்குள்ள மருத்துவமனையானது சோழவந்தான் நகரம் மற்றும் சுற்றுப்புற 20 க்கும்மேற்பட்ட கிராமங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இன்று காலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருதய ஆபரேஷன் செய்து கொண்ட சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவர் அறுவை சிகிச்சை முடிந்து பின்பு செய்யப்படும் மறு சிகிச்சைக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு வந்த நிலையில் மருத்துவ சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது மருத்துவமனையில் இருந்த ஜெனரேட்டரும் செயல்படாத நிலையில் இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த ரவி கடும் சிரமத்திற்கு ஆளானார். மேலும் அங்கிருந்த உள் நோயாளிகளும் மின்தடை காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு ஆளான நிலையில் நோயாளிகளுடன் இருந்த உறவினர்கள் விசிறி போன்ற உபகரணங்கள் மூலம் நோயாளிகளுக்கு உதவிகளை மேற்கொண்டு வந்தனர்.

பின்னர் சுமார் 2 மணி நேரத்திற்கு பின்பு ஜெனரேட்டர் வேலை செய்த நிலையில் உள் மற்றும் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் திடீர் திடீரென ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மருத்துவமனை போன்ற அத்தியாவசிய தேவைகள் உள்ள இடங்களில் தடை இல்லாமல் மின்சாரம் வழங்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




