புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 2025 – 2026 ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று நீட் பயிற்சிக்கு தமிழ் வழியில் 388 மாணவர்களும், ஆங்கில வழியில் 75 மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5 மாணவர்களும் ஆக மொத்தம் 468 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த மாணவர்களுக்கு 3 மையங்களில் இன்று 02-04-2026 முதல் 30-04-2026 வரை அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த முதுகலை ஆசிரியர் கருத்தாளர்களைக் கொண்டு குறுகிய கால நீட் பயிற்சி நடைபெற உள்ளது. அந்த முறையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 02-04-2026 இப்பயிற்சியின் தொடக்க நிகழ்வு முதன்மைக்கல்வி அலுவலக வளாக தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது.

இப்பயிற்சியினை முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் தலைமை தாங்கி பயிற்சியினை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு தமிழரசி, மாரிமுத்து, பவுல்ராஜ், முத்துக்கருப்பன், வள்ளியப்பன் ஆகிய தலைமையாசிரியர்களும், அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு தாமரைச்செல்வன், மாரிமுத்து, ஜீவானந்தம், திருமேனிநாதன்,மெர்சி ஆரோக்கியசெல்வி ஆகிய தலைமையாசிரியர்களும், இலுப்பூர் ஆர்.சி.உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு ஜான்சிடெமல், சந்திரகுமார், சபாபதி, ஜமால்முகமது, ரெங்கசாமி ஆகிய தலைமையாசிரியர்களும் குறுகிய கால நீட் பயிற்சிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பயிற்சியானது திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 மணிமுதல் மாலை 4.30 மணிவரை பயிற்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளரான மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில் செய்திருந்தார். இந்நிகழ்வில் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகையன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவித்திட்ட அலுவலர் செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, குருமாரிமுத்து மற்றும் தலைமையாசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள், முதுகலை பாட கருத்தாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.




