தமிழக முன்னாள் கூடுதல் டிஜிபி ராஜா பாஜகவில் இணைந்துள்ளார். திருச்சியை சேர்ந்தவர் முன்னாள் கூடுதல் டிஜிபி ராஜா. இவர் 1984ல் ஐ.பி.எஸ்.சாக தேர்வு செய்யப்பட்டார்.

எஸ்.பி.யாக தஞ்சாவூர், திருவண்ணாமலை, கோயம்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். டி.ஐ.ஜி.யாக திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றினார். ஐ.ஜியாக திருச்சியில் பணியாற்றினார். பின்பு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்ற, அவர் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் முன்னாள் கூடுதல் டிஜிபி ராஜா, தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில், தன்னை பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இதுகுறித்து முன்னாள் கூடுதல் டிஜிபி ராஜா கூறியதாவது: பாஜகவின் தேசிய கொள்கை ,வெளிநாட்டு கொள்கை மக்கள் நலனில் அக்கறையுடனே செயல்படுகிறது. பிரதமர் மோடி அவர்கள் வெளிநாட்டு செல்வது தன் வீட்டுக்கு பொருட்களை வாங்குவதற்கு அல்ல. நமது நாடு வளம் படைக்க வேண்டும் என்பதற்காக. மக்கள் நலனில் அதிக அக்கறையுடன் லஞ்சம், ஊழலற்ற ஒரு நிர்வாகத்தை பாஜக அரசு அளித்து வருகிறது.

தன்னலம் கருதாத ஒரு பிரதமராக மோடி விளங்குவதால், அவர் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டு நான் பாஜகவில் இணைந்துள்ளேன். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என செயல் பட்டு வருகிறார். பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக ஆட்சியை பிடித்து தமிழகம் நலம் பெறும்,என்றார்.



