சிவகாசி சங்கரலிங்கனார் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள பிரபல உணவகத்தின் உணவு தயாரிப்பு அறையின் மேற்கூறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மள மளவென எரிந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உணவக ஊழியர்கள் உடனடியாக உணவு பாத்திரங்களில் தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைத்தனர்.

இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டாலும் உணவகத்தில் உணவு சாப்பிட வந்த பொதுமக்கள் தீ விபத்தைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



