தாம்பரம் மாநகராட்சியின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேயர் வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நிதிக்குழு தலைவர் ரமணி ஆதிமூலம் ரூ.1,445 கோடி செலவுத்திட்டத்தையும், ரூ.1,447 கோடி வருவாயையும் அறிவித்தார்.

பட்ஜெட்டில் புதிய பூங்காக்கள், நவீன கழிப்பறைகள், மழைநீர் வடிகால் பணிகள், மண்டல அலுவலகங்கள், மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த ஆண்டு அறிவித்த திட்டங்களில் பலவும் நிறைவேறவில்லை என்றும், ரூ.750 கோடி பாதாள சாக்கடை திட்டத்தின் நிலை குறித்து விளக்கம் இல்லை என்றும் கூறி எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேலையூர் சங்கர், மாநகராட்சியில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் தாமதமாகி வருவதாக குற்றம்சாட்டினார்.










