மதுரை மாவட்டம் திருநகர் பகுதியில் அமைந்துள்ள சி.எஸ்.ஆர். ராமாச்சாரி நினைவு பதின்ம மேல்நிலைப் பள்ளியின் 37-வது பள்ளி ஆண்டு விழா நேற்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு பள்ளியின் தலைவர் திரு. சி.ஆர். வெங்கடேஷ், பள்ளி நிர்வாக இயக்குநர் திருமதி பூர்ணிமா வெங்கடேஷ், முன்னாள் நிர்வாகிகள் திருமதி கமலம் ராஜேந்திரன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலாதர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நான்கு கட்டங்களாக நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.

விழாவின் ஒரு பகுதியாக சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் அவலங்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் எடுத்துரைக்கும் வகையில் மாணவர்கள் ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்தது. மேலும், பொதுவழியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து மாணவர்கள் செய்த சைகை நாடகம் மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவரையும் சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்திருந்தது.
மேலும், துப்பரவு பணியாளர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையைப் போற்றும் நோக்கத்துடன் மாணவர்கள் ஆடிய நடனம் பார்வையாளர்கள், பெற்றோர் மற்றும் விருந்தினர்களை மிகவும் ஆழமாக ஈர்த்தது. சிறார்கள் மொபைல் ஃபோன் பயன்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அதை எவ்வாறு முறையாக பயன்படுத்த வேண்டும் என்பதைக் எடுத்துக்காட்டும் வகையில் மாணவர்கள் வழங்கிய சைகை நாடகம் மிகுந்த விமர்சனத்தையும் பாராட்டையும் பெற்றது.
பல ஆண்டுகளாக இந்த பள்ளி கல்வி, விளையாட்டு, கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறமையான மாணவர்களை உருவாக்கி சமூகத்திற்கு அர்ப்பணித்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.










