350 ஆண்டுகள் பழமை வாய்ந்த திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் வண்ணத்துப்பூச்சி சுமந்துவருவது போன்று வித்தியாசமான முறையில் பிறந்த 2026 புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது.
ஜனவரி1ம் தேதி 2026 ஆம் ஆண்டு பிறந்ததை ஆங்கில புத்தாண்டாக உலகம் முழுவதும் கடைப்பிடித்துக் கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் 2025 டிசம்பர் 31அன்று நள்ளிரவில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. திண்டுக்கலில் 96 கிராமங்களின் தாயகமாக விளங்கும் திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் 350 ஆண்டுகள் பழமையான புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் அருள்தந்தை அருமைசாமி தலைமையில் பங்குத்தந்தை செல்வராஜ்,
உதவி பங்குத்தந்தை ஜஸ்டின் பால்சன் , அருள்தந்தையர்கள் பீட்டர் ராஜ், லாரன்ஸ்,ஜான் பீட்டர், திருத்தொண்டர் அருள் அஜித் குமார் ஆகியோரால் 2025 ஆம் ஆண்டிற்கான நன்றி திருப்பலியும், 2026ஆண்டிற்கான சிறப்பு திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது.

திருப்பலியின் நடுவே நள்ளிரவு சரியாக 12 மணிக்கு ஆலய பலிபீடத்தில் இருந்த 2025 ஆம் ஆண்டு மறைந்த பின் வண்ணமயமான எண்ணங்களுடன் வளமான புதிய ஆண்டு அமைய வேண்டும் என்ற அடிப்படையில் வண்ணத்துப்பூச்சி 2026ம் புதிய ஆண்டை சுமந்து வருவது போன்று புத்தாண்டு பிறந்தது.
வித்தியாசமான முறையில் காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது புத்தாண்டு பிறந்த போது ஆலயத்திலிருந்த அனைவரும் கரவொலி எழுப்பி ஆரவாரமாகவும் உற்சாகமாகவும் வரவேற்றனர்.மேலும், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இந்த புத்தாண்டு திருப்பலியில் திருத்தொண்டர்கள், அருட் சகோதரிகள், பங்கு மக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆலய வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் ஆலய அலங்கார குழுவினரால் அலங்கரிக்கப்பட்டிருந்தது . திருப்பலியில் பங்கேற்ற அனைவருக்கும் புத்தாண்டு கேக் வழங்கப்பட்டது.இந்த புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்குத்தந்தை மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர்.




