கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறார். முதல்வருக்கு யாரை கைது செய்து விட வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்பது தெரிகிறது. 41 உயிர்கள் அநியாயமாக போயுள்ளது.

இதில் எப்.ஐ.ஆர். போட வேண்டிய அவசியமும், கைது செய்ய வேண்டிய அவசியமும் அரசுக்கு உள்ளது. இதனால், நான் அரசுக்கு ஆதரவாக பேசுவதாக நினைக்க வேண்டாம். நடுநிலையாக பார்க்கும் போது எல்லாம் சரியாக தான் நடக்கிறது. த.வெ.க. ஒன்றும் திட்டமிட்டு செய்யவில்லை. இது ஒரு விபத்து தான். நிர்வாகிகளுக்கு அனுபவம் குறைவு என்பதால் இது போன்றது நடந்துள்ளது. விஜய் தர்மீக பொறுப்பு ஏற்றிருந்தால், நீதிமன்றம் அவர் மீது கண்டனம் தெரிவித்து இருக்காது. ஆனால் தங்களின் மீது பழி வந்து விடும் என ஆலோசகர்களோ, வழக்கறிஞர்களோ கூறியதால், விஜய் அமைதியாக இருந்து இருப்பார் என நான் நினைக்கிறேன். இவ்விவகாரத்தில் பல தலைவர்கள் நிதானமாக பேசினார்கள்.
பழனிசாமி நான்கரை ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருந்து, மக்களின் வரிப்பணத்தை பூசித்தவர்கள். ருசி கண்ட பூனை போல, எப்படியாவது பதவிக்கு வந்து விட வேண்டும் என்பதற்காகவும், பதவி ஆசை எல்லாம் தாண்டி பதவி வெறியில் ஆட்சியாளர்களும், ஆளும் கட்சியும் தான் காரணம். இது சதி என எடுத்துக்கொண்டு, “ஆடு நனையது என்பதற்காக ஓநாய் அழுகும்” கதையாக,எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

கூட்டணி கிடைக்காத நேரத்தில், கூட்டணி பற்றி பழனிசாமி பேசுகிறார். விஜய் கூட்டணி பற்றி பேசும் மனநிலையில் இருப்பாரா? விஜய் கூட்டணிக்கு வர வேண்டும் என பழனிசாமி நினைப்பது தவறு கிடையாது. ஆனால், பழனிசாமி ஆட்சிக்கு வர வேண்டும் என தலைகீழாக நின்றாலும், அவரை வீழ்த்தாமல் அ.ம.மு.க. ஓயாது. தமிழகம் முழுவதும் எங்களின் தொண்டர்கள், பழனிசாமியின் ஓநாய் வேஷத்தை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது பழனிசாமி உடனே செல்லவில்லை; பயந்துக்கொண்டு ரொம்ப நாள்களுக்கு பிறகு சென்றார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் உடனே கரூருக்கு சென்று விட்டார். இதை வைத்து அரசியல் பேசும் தலைவர்களை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
கூட்டணிக்காக பழனிசாமி ஊர் ஊராக சென்று பேசுவதை தரம் தாழ்ந்த அரசியலாக நான் பார்க்கிறேன். பா.ஜ.க. குழு அமைத்து, பழனிசாமிக்கு நிராக பா.ஜ.க. அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது. தூத்துக்குடி சம்பவத்தின் போது இது போன்ற குழுவும் வரவில்லை.

கரூரில் நடந்த கொடிய துயரத்தை அரசியல் ஆக்காமல், வரும் காலங்களில் அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் ஒரு உயிர் கூட போகாமல் கையாள வேண்டும். இது வருங்காலத்திற்கு ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். விஜய் அரசியலுக்கு புதியவர். அவரை சுற்றி இருப்பவர்களும் அரசியல் அனுபவம் இல்லாதவர்களாக இருப்பதால் இது போன்ற பிழை தான் ஏற்பட்டுள்ளது. விஜயை தவறாக வழிநடத்துகிறார்கள். ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் கூறிய கருத்துக்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அண்ணாமலையின் கருத்து எனக்கு வருத்தம் அளிக்கிறது. அவரிடம் நான் நிச்சயம் பேசுவேன்.
தமிழக மக்கள் யாரையும் ஜாதி, மதம் பார்க்க மாட்டார்கள். விஜய் குறித்து ஹெச்.ராஜா பார்க்கும் பார்வையில்தான் குறைபாடு உள்ளது.
விழுப்புரம், மதுரை மாநாடு, திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் எத்தனை பேர் காயமடைந்தார்கள் என்று போலீசார் பட்டியல் கொடுத்துள்ளனர். நல்ல வேலை அங்கு எதுவும் நடக்கவில்லை. அங்கு நடந்திருந்தால் யாரை குறை சொல்லியிருக்க முடியும்? கரூரில் நடந்ததனால் முன்னாள் அமைச்சர் ஒருவரை குறை சொல்கிறார்கள்.
2006ம் ஆண்டு முதல் செந்தில்பாலாஜி எனக்கு பழக்கம். அவர் எனது நல்ல நண்பர். அவர் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என அரசியல்ரீதியாக எதையும் செய்வார். ஆனால், இது போன்ற கொடூர புத்தி அவருக்கு இருக்காது. இது போன்றது செய்வதால் அவருக்கு என்ன லாபம் இருக்கப் போகிறது?
எடப்பாடி பழனிசாமியை தவிர, ராமசாமியோ, குப்புசாமியோ யாராக இருந்தாலும் எனக்கு ஒன்றும் கிடையாது. எனக்கு அ.தி.மு.க. மீது எந்த விரோதமும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் ரொம்ப கம்போர்ட்டாக இருந்தோம். மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில், அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என இருந்த சட்டத்தை மாற்றி, 10 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என “டெண்டர் ஸ்டைலில்” பழனிசாமி மாற்றியுள்ளார்.
இதனால், இது அ.தி.மு.க.வாக இல்லை, ஈ.டி.எம்.கே.வாக உள்ளது. எங்களைப் பொறுத்தவரை, ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் வர வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிசாமி திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி வருவதற்கு நிச்சயம் வாய்ப்பே இல்லை. நாங்கள் எங்கள் கட்சியைத் தேர்தலுக்கு தயார்படுத்துவதற்கான வேலைகள் எல்லாம் செய்து வருகிறோம். டிசம்பரில் தான் அறிவிப்போம் என அவர் கூறினார்.