தங்களுக்கு ஏலப்பணத்தை திருப்பி தர வேண்டும் என்றும் இல்லையெனில் முறைகேடாக கடைகளை நடத்துவோரை அப்புறப்படுத்தி தர வேண்டும் என்றும் இதற்கு நடவடிக்கை எடுக்காத அறநிலையத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூரில் இந்துசமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட 800 ஆண்டுகள் பழமையான கதலி நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது.

இக்கோவிலில் பூஜை பொருட்கள் துளசி பூ தேங்காய் பழம் ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகள் தொடர்பாக ஏலம் நடைபெறுவது வழக்கம்.
அதனடிபடையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் அனைத்து பூஜை பொருள் கடைகளையும் நடத்துவதற்கு கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலத்தில் ஆண்டிபட்டியைச் சேர்ந்த வீரபாண்டி என்பவர் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை ஏலம் எடுத்தார்.

இந்நிலையில் ஏலம் எடுத்தவர் கடைகளை வைத்து நடத்தும் போது சென்ற முறை ஏலம் எடுத்த நபர்கள் முறைகேடாக கோவில் வளாகத்திலேயே கடைகளை தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர்.
இதனால் முறையான ஏலம் எடுத்த தனக்கு விற்பனைகள் பாதிப்பு அடைந்து நஷ்டம் ஏற்படுவதாகவும் இதுதொடர்பாக கோவில் அறநிலையத்துறை நிர்வாக அதிகாரிகளிடம் வீரபாண்டி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றார்.
இதையடுத்து வேறு வழியின்றி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வீரபாண்டி கடந்த ஜூலை மாதம் தொடர்ந்த வழக்கில் கடந்த மாதம் 12ஆம் தேதி ஏலம் எடுத்த வீரபாண்டிக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்டது.
அதாவது தீர்ப்பில் முறையாக ஏலம் எடுக்காமல் கோவில் வளாகத்தில் பூஜை பொருள் கடைகளை நடத்துபவர்களை உடனடியாக காவல்துறையினர் உதவியுடன் அப்புறப்படுத்தவும் ஆணை பிறப்பிக்கபட்டது.
ஆனால் தீர்ப்பு வெளிவந்து இரண்டு மாதங்களாகியும் கதலிநரசிகங்க பெருமாள் கோவில் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வீரபாண்டி தொடர்ந்தார்.
இதையடுத்து கோவில் நிர்வாகம் இன்று கோவில் வளாகத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதாக அறிவிப்பு செய்திருந்தது.
இந்நிலையில் முறையாக ஆக்கிரமிப்பு கடைகைள அகற்றாமல் கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் கண் துடைப்பிற்காக ஒரே ஒரு கடையை மட்டும் அகற்றிவிட்டு நாடகமாடியதாக குற்றச்சாட்டும் ஏலம் எடுத்த நபர் கடந்தாண்டு ஏலம் எடுத்து இந்த ஆண்டு ஏலம் எடுக்காமல் கடைகளை நடத்துவோரிடம் கமிஷனாக லஞ்சம் பணம் பெற்று அவர்களை கடை நடத்த கோவில் நிர்வாகம் அனுமதிப்பதாகவும் ஏலம் எடுத்த வீரபாண்டி புகார் கூறியுள்ளார்.
மேலும் முறையாக ஓராண்டிற்கு 6.5 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்த தங்களுக்கு
ஏலம் எடுக்காத நபர்கள் கடைகளை நடத்துவதால் துளசி பூ தேங்காய் வாழைப்பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் நாள்தோறும் வீணாகி ஏலத்தொகை முழுவதும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கும் நபர் தங்களுக்கு ஏலப்பணத்தை திருப்பி தர வேண்டும் என்றும் இல்லையெனில் முறைகேடாக கடைகளை நடத்துவோரை அப்புறப்படுத்தியும் இதற்கு நடவடிக்கை எடுக்காத கோவில் அறநிலையத்துறை அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.