• Mon. Jul 27th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

மேம்பாலம் கட்டப்பட்டு வரும் பணிகளை ஆய்வு..,

ByM.S.karthik

Sep 7, 2025

மதுரை மாவட்டம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைஅமைச்சர் எ.வ.வேலு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் நெடுஞ்சாலை துறை சார்பில் கோரிப்பாளையம் மற்றும் அப்பல்லோ ஆகிய சந்திப்புகளில் மேம்பாலம் கட்டப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவிக்கையில்:- மதுரை மாநகரின் வடபகுதியையும் தென்பகுதியையும் இணைக்கும் வகையில், கோரிப்பாளையம் சந்திப்பில் புதிய சாலை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலப் பணிகளை முதலமைச்சர் அக்டோபர் 30, 2023 அன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.190 கோடி ஆகும்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்இந்த மேம்பாலம் தமுக்கம் பகுதியில் தொடங்கி, கோரிப்பாளையம் சந்திப்பைக் கடந்து நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பில் முடிவடைகிறது. மேலும், வைகை ஆற்றில் தற்போதுள்ள ஏ.வி. பாலத்திற்கு இணையாக ஒரு புதிய உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது. மேம்பாலத்தின் கீழ் இருபுறமும் 1400 மீட்டர் நீளமும், 7.50 மீட்டர் அகலமும் கொண்ட சேவைச் சாலைகள் அமைக்கப்படுகின்றன. மேலும், தமுக்கம் முதல் தேவர் சிலை வரை தரைத்தளத்தில் 5 வழித்தடமாக சேவைச் சாலைகள் அமைக்கப்படும்.

தற்போது, கட்டுமானப் பணிகள் 50% நிறைவடைந்துள்ளன.பிரதான பாலம் ஜனவரி 31, 2026-க்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். கூடுதல் இணைப்பு பாலம் மார்ச் 30, 2026-க்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இழப்பீடு கோரிப்பாளையம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, தரைதளத்தில் சாலை விரிவாக்கம் செய்ய ரூ.164 கோடியில் 12,119 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இதனால், கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலின்றி மக்கள் பயணிக்கலாம்.

கோரிப்பாளையம் அப்பல்லோ சந்திப்பில் ஒரு புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நான்கு வழித்தட மேம்பாலம், சிவகங்கை சாலை சுற்றுச்சாலையிலிருந்து கோரிப்பாளையம் வரை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணிக்க உதவும்.அப்பல்லோ, ஆவின் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, இந்த மூன்று சந்திப்புகளும் ரவுண்டானாவுடன் கூடிய சாலைகளாக மேம்படுத்தப்படுகின்றன.தற்போது, கட்டுமானப் பணிகள் 75% முடிந்துவிட்டன. மீதமுள்ள பணிகள் நவம்பர் 30, 2025-க்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

ஆவின் சந்திப்பிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையிலான குறுகிய சாலையை நான்கு வழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, 2,050 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு ரூ. 25 கோடி இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

தெற்குவாசல் முதல் அவனியாபுரம் வரை பாலம் கட்டுவதற்கு 223 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அரசு பரிசீலனையில் இருக்கிறது. வைகை தென்கரை சாலைப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது. வடகரை சாலையில் விடுபட்டுள்ள இடங்களில் சாலை அமைப்பதற்கு நில எடுப்புக்காக ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், , மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மூ.பூமிநாதன் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சத்தியபிரகாஷ் நெடுஞ்சாலைத்துறை சிறப்பு அதிகாரி சந்திரசேகர் , நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் ரமேஷ் உள்ளிட்டஅரசுஅலுவலர்கள்பலர் உடனிருந்தனர்.